இன்று ஒரு குறள் !

திங்கள், ஏப்ரல் 14, 2008

தமிழ் புத்தாண்டு தி(கொ)ண்டாட்டம்

சில நாட்களாகவே எனக்குள் ஒரே குழப்பம்இந்த வருடம் தை முதல் நாள், வழக்கம் போல தமிழ் புத்தாண்டாக கொண்டாடலாமா? இல்லை வேண்டாமா? என்று.


திடுதிப்பென்று தமிழக அரசு இப்படி ஒரு உத்தரவு போடுமென்று நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை .

மாநிலத்தை பாதுகாக்க சட்டங்கள் இயற்றுவதும், மாநிலம் முன்னேற திட்டங்கள் தீட்டுவதும் தான் ஒரு மாநில அரசின் பணி என்று அதுவரை நினைத்திருந்த எனக்கு இந்த உத்தரவைப் பார்த்த பின்புதான் பல்லாண்டு காலமாக ஒரு சமூகத்தால் கடைபிடிக்கப்படும் ஒரு பழக்கத்தை ரத்து செய்யும் அல்லது மாற்றியமைக்கும் வேலை கூட அரசுக்கு உள்ளது என்பது புரிந்தது.


"ஏய் கெழவி தள்ளி போ! நீ சாவ என் வண்டிதான் கெடச்சிதா, சாவு கிராக்கி"

சத்தம் கேட்டு சிந்தனை கலைந்தேன்ரோட்டைக் கடந்த எதிர் வீட்டு ராமாயி பாட்டியை திட்டியபடியே ஒரு ஆட்டோகாரர் என்னை கடந்து சென்றார்

பாவம்! ராமாயி பாட்டிக்கு 60 வயதுக்கு மேலிருக்கும். .ஒண்டிக்கட்டை. கஷ்டப்பட்டு படிக்க வைத்து, வெளி நாடு அனுப்பி வைக்கப்பட்ட ஒரே மகனும் அங்கேயே செட்டில் ஆகிவிட்டான்ஆரம்பத்தில், பணம் அனுப்பிக் கொண்டிருந்தவன், ஒரு தொழிலதிபரின் மருமகனான பின்பு அதையும் நிறுத்திக்கொண்டான் ஏதோ, அரைகுறையா தெரிகின்ற பார்வையை வைத்து அப்பள வியாபாரம் செஞ்சி பொழைக்குது பாட்டி. பாவம்!


"பாட்டி, எப்படி இருக்கே? மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா?" என்று போகிற போக்கில் பாட்டியிடம் வாஞ்சையோடு வி்சாரித்தார் எங்கள் ஏரியா போஸ்ட்மேன்.

கொஞ்ச நேரத்தில் பாட்டியிடம் வந்த எங்கள் தெருவில் மெஸ் வைத்திருக்கும் செட்டிநாட்டுக்காரரின் கடைசிபெண், "ஆச்சி, அடுத்த வாரம் கடைக்கு 500 கட்டு கூடுதலா அப்பளம் வேணும் அப்பா சொல்லிட்டு வரச்சொன்னார்" என்று சொல்லிவிட்டு சென்றாள்

ஸார் பேப்பர்! கூவியபடியே என் கையில் தினசரியைத் திணித்த பாண்டிபழனி (அவன் பேரே அப்படிதான்), "ஆயா, எப்படிக்கீறே? உன் சம்மந்தி போட்டோ பேப்பரிலே வந்திரிக்கு பாத்தியா? "என்று கேட்டுக்கொண்டே பாட்டியை நோக்கி நகர்ந்தான்.

எனக்கு வியப்பாய் இருந்தது
எதிர்வீட்டு பாட்டி ஒன்று, அதை அவனவன் அழைக்கும் பெயர் வெவ்வேறு!

கெழவி, பாட்டி, ஆயா, ஆச்சி என் எப்படி அழைக்கப்பட்டாலும் அந்த பாட்டி ஒன்றுதான்। சிரித்துக்கொண்டே தினசரியின் முதல் பக்கத்தினை நோட்டமிட்டென்.

பதவிக்கு ஆசைப்படாத் ராகுல்- சோனியா வியப்பு!

அம்மா வா வந்து இருண்ட தமிழகத்திற்கு விளக்கேத்து! என்று தொண்டர்கள் விளக்கேற்றி வேண்டவேண்டும் -ஜெயலலிதா

மாநில கழக ஆட்சியிலும், மத்திய அய்மு ஆட்சியிலும் தமிழனின் முன்னேற்றம் அளப்பரியது- ஜனாதிபதியுடன் சுற்றுபயணம் மேற்கொள்ளும் கனிமொழியை வாழ்த்தி கலைஞர் கடிதம்

நான்தான் பிரதமர், நானேதான் பிரதமர்! - அத்வானி புத்தகம் வெளியீடு

எப்போதும்போல் ஒரே மாதிரியான செய்திகள்.
அவசரமாய் தேதியைப்பார்த்தேன்சரியாகத்தான் இருந்தது.

சிரித்தபடியே அடுத்த பக்கம் புரட்டினேன்.

புத்தாண்டு வாழ்த்து கூறி ஜெயலலிதா, இல.கணேசன். அது சரி!

அடுத்து

அட நம்ப வைகோ,

புத்தாண்டுக்கு அவரும் வாழ்த்தா?

அட ஆமாம்!

ஆனால் புத்தாண்டு வாழ்த்து அல்ல,

சித்திரை திருநாள் வாழ்த்து!

காரணம் புரியாமல் எதிர்வீட்டு பாட்டி மனக்கண்ணில் வந்தார். கூடவே கெழவி, பாட்டி ஆயா, ஆச்சி பொன்ற வர்த்தைகளும் காதில் ஒலித்தன

ஒரு முடிவுக்கு வந்தவனாய் உற்சாகமாய் சைக்கிள் எடுத்து ஏறி மிதிக்க ஆரம்பித்தேன் கடைத்தெருவை நோக்கி, புத்தாண்டு இல்லையில்லை சித்திரை திருநாள் கொண்டாட பொருட்கள் வாங்க வேண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக