இன்று ஒரு குறள் !

சனி, ஏப்ரல் 18, 2009

இந்த தேர்தலில் யாரை ஆதரிக்கலாம் ! சிந்திப்பீர் !!


இப்போது வந்திருக்கும் இந்த பாராளுமன்ற தேர்தல், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு விசித்திரமான் தேர்தல் என் சொல்லலாம்.

பொதுவாக தேர்தல் அறிவிப்பு வரும் முன்னரே, பெரும்பாலான மக்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு எடுத்து தேர்தலுக்காக காத்திருப்பர். ஆனால் இம்முறை வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் எந்த முடிவும் எடுக்க இயலாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஏன், என்ன காரணம்?

மிக நீண்ட காலமாகவே, மக்களுக்கு ’நல்ல கட்சிகளில் இது மிக நல்லது’ என்று தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லாமலே போனது. அதனால் ’(தரங்) கெட்ட கட்சிகளில் இது கொஞ்சம் தேவலைப் போல் இருக்கிறது’ என்று தான் தேர்ந்தெடுத்து வந்தனர். அதற்கு அளவுகோலாய் சட்டம்- ஒழுங்கு, ஊழல், வாரிசு அரசியல் என்பன போன்ற உள்நாட்டு பிரச்சினைகளே இருந்தது.

ஆனால் இம்முறை அதிலும் சிக்கல்.

இந்த பிரச்சினைகளோடு இன்னொரு பிரச்சினையாய், எல்லாவற்றையும் விட தலையாய பிரச்சினையாய், நம் தொப்புள்கொடி உறவுகளின் உயிர் பிரச்சினையாய், நம் இனப்பிரச்சினையாய் ஈழத்தமிழர் பிரச்சினை முதலில் வந்து நிற்கிறது.

சில நாட்கள் முன்பு வரை, ஈழத்தமிழர் பிரச்சினையில் மீசை துடித்து, நரம்புகள் புடைத்த தலைவர்கள் எல்லாம் தேர்தல் என்றவுடன் பணம் பதவி செல்வாக்கு போன்ற சுயநலன்களை மனதில் கொண்டு பம்மி, பதுங்கி, பின்வாங்கி, வாலை மடித்து தன் பின்னங்கால்களின் இடையே வைத்துக்கொண்டு, சீட்டு எலும்புகள் போடும் எஜமானர் வீட்டைச் சுற்ற ஆரம்பித்த விட்டனர். அதற்கு முதலாளிக்கு விசுவாசமாக ஒரு சால்ஜாப்பு அறிக்கை வேறு .

அதே போல் சில பதிவர்களும் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக சிங்கம் போல் கர்ஜித்து, இனப்படுகொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவியவர்களையும் அதற்கு கை கட்டி வாய் பொத்தி ’ஆமாஞ்சாமி’ போட்டவர்களையும், வார்த்தைகளால் வறுத்து எடுத்தவர்கள், இப்போது தங்களின் கட்சிப்பாசம் தலை தூக்க , அவர்களின் கடந்த கால துரோக செயல்களுக்கு சப்பைக்கட்டு கட்டிகொண்டும் மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் எழுதி அதற்காக கஷ்டப்பட்டு காரணங்களை தேடித்தேடி கண்டுபிடித்து கூறீ தன்னைத்தானே ஏமாற்றி கொள்கிறார்கள்.


இந்த தேர்தலில் நம் முன் தொக்கி நிற்கும் தலையாய கேள்வி, யார் வர வேண்டும்? என்பதல்ல யார் வரக்கூடாது? என்பதே.


கூப்பிடு தூரத்தில் நம் இனம், பெண்கள் குழந்தைகள், முதியோர்கள் என்று பேதம் இல்லாது கொத்து கொத்தாக வேட்டையாடப் பட்டபோது,

அதை தடுத்து நிறுத்த வேண்டி தமிழ் உணர்வாளர்கள், உணர்வை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த பற்பல அறப்போராட்டங்களை நடத்தியபோது,

அறப்போராட்டம் ஆட்சியின் மமதையை கலைக்காது . தமிழ் இனமே பொங்கி எழுந்தால்தான் விடிவு ஏற்படுமென்று வேள்வித்தீ மூட்டி, அதில் நெய்யாய் முத்துக்குமரன், தன்னையே பலியிட்டுக் கொண்டபோது,

அதன் பொருட்டு தமிழ்நாடே கொந்தளித்த போது, இனப்படுகொலையை தடுத்து நிறுத்த அரசினரை பார்த்து மன்றாடியபோது


இரக்க குணமற்ற, ஆணவம் மிகுந்த காங்கிரஸ் அரசு இனப்படுகொலையை தடுத்து நிறுத்த எந்த முயற்சியையும் செய்ய வில்லை என்பது மட்டுமல்லாமல் இலங்கை அரசுக்கு ஆயுதம் தந்து உதவுவதையும் நிறுத்தவில்லை.

தமிழ் நாட்டு திமுக அரசோ மத்திய காங்கிரஸ் அரசை உரிய முறையில் அழுத்தம் கொடுத்து வற்புறுத்தவில்லை அவ்வப்போது கோபம் கொண்ட மக்களை சாந்தப் படுத்த கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஒப்புக்கு சப்பாணி ஆட்டம் ஆடினார்.

அப்போது பொங்கினோமே,

இந்த இரண்டு அரசும் ஒழிய வேண்டும் என்று வயிறெரிந்து சாபமிட்டோமே,

சோனியா விரோதி, கருணாநிதி துரோகி என இனங்கண்டு முழங்கினோமே,

அதே போன்ற கையறு நிலை மீண்டும் வர வேண்டுமா?

வேண்டாம், இந்த காங்கிரஸ் கூட்டணி.
இவர்கள் ஆட்சிக்கு இனி எப்போதும் வரக்கூடாது.
தமிழன் கிள்ளுக்கீரை அல்ல என்று எல்லோருக்கும் உணர்த்துவோம்.

சேதுசமுத்திர திட்டத்திற்கு ஆபத்தாம் அதனால் மீண்டும் காங்கிரஸ் திமுக வரணும் என்கிறார்கள், சிலர்.

சேதுத் திட்டம் நின்றாலும் பரவாயில்லை அதற்கடுத்த முறை ஆளும் கட்சி மாறினால் மீண்டும் திரும்ப தொடங்கலாம்.

ஆனால் தமிழ் இனபிரச்சினைக்கு காத்திருக்க முடியாது ஏனெனில் அதற்குள் அங்கு நம் இனம் அழிந்து போய் புல்லு முளைத்திருக்கும்.

சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக