இன்று ஒரு குறள் !

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஒரு ஆணாய் நான் வெட்கப் படுகிறேன்

 
 
 
கனமான இதயத்துடன் 2012 ம் ஆண்டு நம்மை கடந்து செல்கிறது. காரணம் அடுத்தடுத்து வந்த வ்ண்புணர்வு சம்பவங்கள், செய்திகள்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் நமது நாட்டில் பெண்கள் தனியாக, சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது எவ்வளவு வெட்க கேடான விஷயம்.
 
பெண்களை ஒரு உயிருள்ள சக ஜீவனாக, தனக்கென்று ஒரு மனமுள்ள மனுஷியாக,  உணர்வுகள் உள்ள ஒரு உயிரினமாக கருத முடியாத  ஆணாதிக்க மனநிலையிலே இந்த 21ம் நூற்றாண்டிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய கேவலம்.
 
பெரும்பான்மையான ஆண்கள் அப்படி இல்லையே என்றாலும் கூட, அப்படிப் பட்ட சிறுபான்மையினருக்காக ஆண்கள் அனைவருமே தலை குனிய வேண்டியவர்கள் ஆகிறோம்.

நாட்டின் தலை நகரான டெல்லியில்  ஒரு சில நிமிட  அற்ப சுகத்திற்காக மிருக வெறி கொண்டு, எதிர் கால கனவுகளோடு துள்ளித் திரிந்த ஒரு 23 வயது மாணவியை வண்புணர்வு செய்து வெறியை தணித்து கொண்ட பின்னரும், எதிர்த்து போராடினாள் என்ற காரணத்திற்காக அவள் பிறப்புறப்பில் கையை விட்டு கையில் கிடைத்தை எல்லாம் வெளியில் இழுத்து எறிந்த அந்த மிருகங்கள் மற்றவர்களை போலவே ஒரு தாய்க்கு தான் பிறந்திருப்பார்களோ என்றே ஐயமுற வைக்கிறது.

அந்த மிருகங்களின் வேட்டைக்கு இரையான சகோதரி சில நாட்களாக மருத்துவத்தின் துணை கொண்டு உயிருக்கு போராடி வந்தவர் நேற்று முற்றிலும் தோற்றுப் போனார்.

இந்த மிருகங்களின் வேட்டை நடந்து கொண்டிருந்த நேரங்களில், யாருடைய கண்களிலும் இந்த வெறி சம்பவம் சிக்காமல் போனது தான் மிக பெரும் வேதனை.

ஒரு நாட்டின் தலை நகரிலே, வீதிகளில்  போலீஸார் ரோந்து சுற்றுவதில்லையா ?  வீடியோ கேமராக்கள் மூலம் நகரை போலிஸார் கண்காணிப்பதில்லையா? 
 
தலை நகரினிலே இந்த வசதிகள் இல்லையென்றால்,  நாட்டின் மற்ற பிற நகரங்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் ?  இதில் இந்தியா வல்லரசாகிறது என்று விளம்பரம் வேறு.

இது தலைநகர லட்சணமென்றால், தாய்மையை மதிக்கும் நம் தமிழ் திரு நாட்டில் புனிதா என்ற 13 வயது இளங்குருத்து நாசப்படுத்தப் பட்டு கொல்லப் பட்டுவிட்டது.

இதை நாசப் படுத்தி விட்டு கொன்றவன், ஏற்கனவே குற்ற செயலில் ஈடுபட்டதால் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்து, மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டு போலீஸாரால் தேடப் பட்டுக் கொண்டு வந்தவன்.

அப்படி தேடப்பட்டு வந்தவன் நிம்மதியாக சரக்கு வாங்கி மூச்சு முட்ட குடித்து விட்டு, போதை அதிகமாகி போக வேண்டிய ரயிலை தவற விட்டு ரயில் நிலையத்திலேயே மட்டையாகி கிடந்திருக்கிறான்.
 
அடுத்த நாள் தெளிந்து, மிக சாவகாசமாக நடை பயணமாக ஊர் போக, வழியில் வந்த அந்த சிறுமியை பார்த்ததும் வேட்டை ஆடி இருக்கிறான் (அந்த நேரம் அந்த சிறுமிக்கு பதில் ஆடு மாடு வந்திருந்தாலும் விட்டுருக்க மாட்டான் போல).
 
அது வரையிலும் போலிஸார் அவனை தேடிக் கொண்டே..டே..டே..டே..  இருந்திருக்கிறார்கள். ஒரு வேளை அவன் லோக்கலில் இருப்பது தெரியாமல் லண்டனிலும் பாரிஸிலும் போய் தேடிக் கொண்டிருந்தார்களோ என்னமோ.

இந்த இரண்டு சம்பவங்கள் தான் என்றில்லை இது போல் இன்னும் எண்ணற்ற வண்புணர்வுகள் அங்கங்கே தினமும் அ்ரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
 
சில சின்ன செய்தியாக பத்திரிக்கையில் இடம் பெறுவதும், பல போலீஸ் மற்றும் ஊடகங்களின் கண்களுக்கு படாமலே போய் விடுவதாகவும் இருக்கிறது.
 
ஒரு 3 வயது குழந்தையை கூட குழந்தை என்று பார்க்காமல், தன் இச்சையை தீர்க்க கிடைத்த எதிர் பாலினம் என்று பார்க்க தூண்டும் காம வெறி பிடித்தவர்களின் மத்தியில் தான் நாமும் வாழ்கிறோம் என் நினைக்கவே வேதனையாய் இருக்கிறது.
 
சகோதரிகளே, நான் வெட்கப் படுகிறேன் !
ஆம் !!  ஓரு ஆ்ணாய் நான் வெட்கப் படுகிறேன் !!!

2 கருத்துகள்:

  1. நானும் வெட்கபடுகிறேன்.
    ஆணாதிக்க மனநிலையில் ஆண்கள் பலர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மகா கேவலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வேகநரி சார்,

      இவனுங்க தான் இன்னமும் காட்டு மிராண்டியாய் இருக்கானுங்கன்னா இதுக்கு தீர்வு சொல்றேன்னு பெண்கள் இரவு 10 மணிக்கு மேல் நடமாட கூடாது, எல்லா பெண்களும் பர்தா போட்டுக்கணும்னு அறிவுரை சொல்ற தலிபான்களை என்னான்னு சொல்றது

      நீக்கு